இரட்டை இலை சின்னத்தைப் பெற்றுத் தருவதாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தரகர் சுகேஷ் சந்திரசேகரை பெங்களூரில் சுதந்திரமாக உலவ விட்ட 7 தில்லி போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தரும் நோக்கில் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக டி.டி.வி.தினகரனிடம் பணம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் சுகேஷ் சந்திரசேகரை தில்லி போலீஸார் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி கைது செய்தனரர். அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, மற்றொரு வழக்கில் சுகேஷை கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அவரை தில்லி போலீஸார் கடந்த 9-ஆம் தேதி பெங்களூருக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவரை தங்கள் காவலில் இருந்து விடுவித்து, இரு தினங்களுக்கு அவர் சுதந்திரமாக சுற்றி வர போலீஸார் அனுமதித்தனர். இதைப் பயன்படுத்திக் கொண்டு பல்வேறு சட்டவிரோத பரிவர்த்தனைகளிலும் வர்த்தக பேரங்களிலும் சுகேஷ் ஈடுபட்டதைக் கண்டறிந்த வருமான வரித்துறை, இது தொடர்பாக தில்லி காவல்துறை ஆணையர் அமுல்யா பட்நாயக்கிடம் ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது.
அதன் அடிப்படையில், சுகேஷை பெங்களூரில் சுதந்திரமாக உலவ விட்ட 7 தில்லி போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் காவல் துறையின் 3-ஆவது பட்டாலியன் பிரிவைச் சேர்ந்தவர்கள்.