ஜம்மு-காஷ்மீரில் பெண்களின் கூந்தல் கத்தரிக்கப்படும் சம்பவங்களைக் கண்டித்து, அங்கு பிரிவினைவாதிகள் சார்பில் சனிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனால், ஸ்ரீநகரின் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களான சையத் அலி ஷா கிலானி, உமர் ஃபாரூக், முகமது யாசின் மாலிக் ஆகியோர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்ட இப்போராட்டம் காரணமாக, ஸ்ரீநகரில் பள்ளிகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. அரசுப் பேருந்துகள் இயங்கவில்லை. தனியார் வாகனங்கள் மட்டும் குறைந்த அளவில் இயங்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதனிடையே, ஸ்ரீநகரில் அசம்பாவிதச் சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில், கன்யார், ரெய்னாவாரி, எம்.ஆர்.கஞ்ச் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
காஷ்மீரில் பெண்களின் கூந்தல் கத்தரிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் கூறி, அந்த மாநில பிரிவினைவாதிகள் கடந்த ஒரு மாதமாக வேலை நிறுத்தப் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.