புதுதில்லி: தில்லியில் இன்று குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன் வெளிவந்த முதல் கருத்துக் கணிப்பு ஒன்று பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
குஜராத் மாநில சட்டப்பேரவையின் ஆயுள் காலம் வரும் ஜனவரி மாதத்துடன் முடிவடைவதால், தில்லியில் இன்று தேர்தல் ஆணையம் குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை அறிவித்தது. அதன்படி குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் டிசம்பர் 9, 14 -ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஜோதி அறிவித்தார்.
தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன் இந்தியா டுடே செய்திக் குழுமமானது, ஆக்ஸிஸ் மை இந்தியா நிறுவனத்துடன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று வெளியானது. இந்த கருத்துக்கணிப்பானது குஜராத்தின் 182 தொகுதிகளிலும், கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் இம்மாதம் 15-ஆம் தேதி வரையிலான ஒரு மாத காலகட்டத்தில் எடுக்கப்பட்டதாகும்.
இந்த கருத்துக்கணிப்பில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியானது 115 முதல் 125 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்று தெரிகிறது. தொடர்ந்து 22 வருடங்களாக ஆட்சி செய்து வருவதால் அங்கு நிலவ வாய்ப்புள்ள பாஜக ஆட்சிக்கு எதிரான மனப்பான்மை, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையினால் வியாபாரிகளுக்கு பாதிப்பு மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவை பாஜகவை பாதிக்கும் என்று கூறப்பட்ட நிலையில் இந்த முடிவுகள் வெளிவந்துள்ளது.
காங்கிரஸினை பொறுத்த வரையில் மொத்தம் பதிவான வாக்குகளில் 32% பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இஸ்லாமியர்கள் - 10%; பட்டிடார் சமூகத்தினர் - 16% & தலித்துகள் - 6% என்ற அளவில் ஓட்டுப் பிரிவுகள் அமைந்துள்ளது.