லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் 4, 7 மற்றும் 9 வயதுடைய சிறுமிகளை உறவினரே ஓடும் ரயில் இருந்து வெளியே வீசி கொலை செய்ய முயன்ற கொடூர சம்பவத்தால் ஒரு சிறுமி உயிரிழந்தாள், இரு சிறுமிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து 90 கி.மீட்டர் தொலைவில் உள்ள சீதாப்பூர் ரயில் பாதையில் சிறுமி ஒருவரின் உடல் கிடப்பதை, ரயில்வே அதிகாரி ஒருவர் கண்டுள்ளார். அந்த சிறுமியின் உடலை மீட்டு ரயில்வே போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் சிறுமி உயிரிழந்து விட்டதும், அவரது பெயர் முனியா(7) என்பதும் தெரியவந்துள்ளது.
அங்கிருந்து 50 கி.மீட்டர் தொலைவில் தண்டவாளத்தில் பலத்த காயங்களுடன் கிடந்த அல்குன் கதூன்(9) மற்றும் ஷமிம்(4) என்ற இரு சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் இறந்த சிறுமி முனியாவின், சகோதரிகள் என தெரியவந்துள்ளது. இவர்களில் அல்குனிற்கு இடுப்பெழும்பிலும், கைகளிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ஷமிம் என்ற சிறுமிக்கு மண்டை ஓட்டில் விறிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த மூன்று சிறுமிகளும் தங்கள் மாமாவுடன் ரயிலில் வந்து கொண்டிருக்கும்போது, 3 சிறுமிகளையும் அவர் ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசியுள்ளார் என்பது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குழந்தைகள் ஓடும் ரயில் இருந்து தள்ளிவிட்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. ஆனால், குடும்ப வறுமையின் காரணமாக அந்த சிறுமிகளை கொல்ல அவர்களின் குடும்பத்தினர் முயற்சித்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட குழந்தைகள் முதலில் தங்களது தந்தையே ரயிலில் இருந்து தள்ளிவிட்டதாக கூறினர். பின்னர், மாமா தள்ளிவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள மோதிஹரி போலீஸார், பிகாரில் உள்ள அந்த குடும்பத்தை தேடி வருகின்றனர்.