ஹிமாச்சலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் நவம்பர் 9-ஆம் தேதி நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி அறிவித்துள்ளார்.
மொத்தம் 68 தொகுதிகள் கொண்ட அந்த மாநிலத்துக்கு ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடத்தப்படும் என்றும் டிசம்பர் 18-ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் அக். 23 மற்றும் வேட்பு மனுவை திரும்பப் பெற கடைசி நாள் அக். 26 ஆகும்.
இந்நிலையில், ஹிமாச்சலப் பிரதேச தேர்தலில் போட்டியிட பில்லியனர் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹிமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி மாவட்டத்தின் ஜோகிந்தர் நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் பிரகாஷ் ராணா என்பவர் சுயோட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
பிரகாஷ் ராணா, சவுதி அரேபியாவில் வசித்து வரும் பில்லியனர் ஆவார். அங்கு பல நிறுவனங்களின் அதிபதியாக உள்ளார். வைர வியாபாரத்தை தனது பிரதான தொழிலாகக் கொண்டவர்.