தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி வெள்ளிக்கிழமை திடீரென அனுமதிக்கப்பட்டார்.
ஹிமாசலப் பிரதேச மாநிலம், சிம்லாவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சுற்றுப்பயணம் சென்றிருந்தார். இந்தச் சூழ்நிலையில், சிம்லாவில் இருந்து அவர் தில்லிக்கு அவசரமாக வெள்ளிக்கிழமை திரும்பினார். அப்போது அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தில்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சோனியா காந்தியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் இருந்து சனிக்கிழமை மாலை 4 மணியளவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
இதுகுறித்து அந்த மருத்துவமனையின் நிர்வாகக் குழு தலைவர் டி.எஸ். ராணா கூறுகையில்,
"மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டார். அவர் வயிறு தொடர்பான உபாதையால் அனுதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். அவரை தொடர்ந்து ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளோம்' என்றார்.