நாடு முழுவதும் 800 பொறியியல் கல்லூரிகளை மூடச்சொல்லும் ஏஐசிடிஇ!

நாடு முழுவதும் மிகக் குறைந்த மாணவர் சேர்க்கைக் கொண்ட 800 பொறியியல் கல்லூரிகளை 2018ம் ஆண்டில் மூடிவிடும்படி அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் கேட்டுக் கொண்டுள்ளது.
நாடு முழுவதும் 800 பொறியியல் கல்லூரிகளை மூடச்சொல்லும் ஏஐசிடிஇ!


பெங்களூர்: நாடு முழுவதும் மிகக் குறைந்த மாணவர் சேர்க்கைக் கொண்ட 800 பொறியியல் கல்லூரிகளை 2018ம் ஆண்டில் மூடிவிடும்படி அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் மிகக் குறைவான மாணவர் சேர்க்கைக் கொண்ட பொறியியல் கல்லூரிகளை 2018ம் ஆண்டில் மூடிவிடுமாறு அறிவுறுத்தியுள்ள ஏஐசிடிஇ, இது குறித்து செப்டம்பர் 2ம் வாரத்தில் அறிக்கை அளிக்கும்படியும் வலியுறுத்தியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து 30 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் சேர்க்கைக் கொண்ட பொறியியல் கல்லூரிகளை மூடுமாறு அறிவுறுத்தியுள்ளோம். மேலும், அருகில் இருக்கும் பொறியியல் கல்லூரிகளோடு தங்கள் கல்லூரிகளை இணைத்துவிடவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று ஏஐசிடிஇ-யின் தலைவர் அனில் டி.சஹஸ்ரபுத்தே கூறினார். கடந்த ஐந்து ஆண்டுகளில், ஒவ்வொரு பொறியியல் கல்லூரியிலும் எத்தனை மாணவர்கள் சேர்க்கை பெறுகிறார்கள் என்பது குறித்த புள்ளி விவரங்களை கணக்கில் எடுத்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், மூடிவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள பொறியியல் கல்லூரிகள் குறித்த பட்டியல் பல்வேறு காரணங்களுக்காக பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்படவில்லை.

இதனால், அதிகப் பொறியல் கல்லூரிகளைக் கொண்டிருக்கும் மாநிலங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் தமிழகத்தில் எத்தனை பொறியியல் கல்லூரிகள் மூடப்பட உள்ளன என்பது குறித்த தகவல் கிடைக்கவில்லை.

கல்லூரியை மூடுவதா அல்லது அருகில் உள்ள பொறியியல் கல்லூரியுடன் இணைப்பதா என்பது குறித்து ஆலோசித்து 2 வாரங்களுக்குள் அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றம் 2018-19ம் கல்வியாண்டில் நடைமுறைக்கு வரும். இந்த பட்டியலில் இருக்கும் சில கல்லூரிகள், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்ததை அடுத்து அந்த கல்லூரிகளும் பட்டியலில் இணைக்கும் கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் டி.சஹஸ்ரபுத்தே கூறினார்.

நாடு முழுவதும் மாணவர் சேர்க்கை குறைந்து விட்ட பொறியியல் கல்லூரிகளை மூடுவதற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் (ஏஐசிடிஇ) முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் ஏஐசிடிஇ-யின் அங்கீகாரம் பெற்று 10,361 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. 

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மட்டும் அதிகபட்சமாக 1,500 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அதற்கடுத்த இடத்தில் 1,300 பொறியியல் கல்லூரிகளுடன் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது. உத்தரப்பிரதேசம் 1,165, ஆந்திரா 800 பொறியியல் கல்லூரிகளைக் கொண்டிருக்கின்றன. கர்நாடகாவில் சுமார் 600 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. 

ஒட்டுமொத்த பொறியியல் கல்லூரிகளில் ஆண்டுக்கு 30 லட்சம் மாணவர்களை சேர்க்க முடியும். ஆனால், நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 27 லட்சம் காலியிடங்கள் உள்ளன. அவற்றில், கடந்த 5 ஆண்டுகளில் 30 சதவீதத்துக்கும் குறைவாக மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ள பொறியியல் கல்லூரிகளை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்தக் கல்லூரிகளை, அடுத்த ஆண்டில் மூடிவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பொறியியல் கல்லூரிகளின் தேவை குறைந்ததாலும், கல்வித் தரம் குறைந்து விட்டதாலும், கல்லூரிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக, ஏஐசிடிஇ தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதற்காக, மூடப்படும் பொறியியல் கல்லூரிகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையும் குறைக்கப்பட்டுள்ளது. 

ஏஐசிடிஇயின் முடிவை அடுத்து சில கல்லூரிகள் மேலும் ஒரு ஆண்டு கால அவகாசம் கோரியுள்ளன. மாணவ சேர்க்கைய அதிகரிக்க பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். ஆனாலும் முயற்சி பலன் தரவில்லை என்கிறார்கள் கவலையோடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com