பிகாரில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தாலும், மத்தியில் விரிவுபடுத்தப்பட்ட புதிய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதை ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் பாட்னாவில் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்யும் நிலையில், மத்திய அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளும்போது அணிவதற்காக சில ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவர்கள் புதிய ஆடைகளை வாங்கி தயாராகக் காத்திருந்தனர்.
ஆனால் பாவம், அவர்கள் எதிர்பார்த்த அழைப்புக் கடிதம் அவர்களுக்கு இன்னும் வந்து சேரவில்லை.
அமைச்சரவை விரிவாக்கம் குறித்தோ, புதிய அமைச்சரவையில் இடமளிப்பது குறித்தோ பாஜக தலைவர்கள் தன்னுடன் பேசவில்லை என்று ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவரும், பிகார் முதல்வருமான நிதீஷ் குமார் குறைபட்டுக் கொள்கிறார். நிதீஷ் குமாரின் குணம் நன்கு தெரிந்த பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் அதுகுறித்து அவருடன் ஏன் ஆலோசிக்கப் போகிறார்கள்?
தனது புதிய கூட்டாளியான ஐக்கிய ஜனதா தளத்தின் முன்போ, அதன் தலைவர் நிதீஷ் குமார் முன்போ மோடி ஒரு போதும் தலைவணங்க மாட்டார்.
ஏற்கெனவே, கடந்த 2010-ஆம் ஆண்டில் சாதாரண விளம்பரப் பிரச்னைக்காக பாஜக தலைவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த விருந்து நிகழ்ச்சியை நிதீஷ் குமார் ரத்து செய்தார். அதை மனதில் வைத்துதான், பிகார் வெள்ளத்தை ஹெலிகாப்டரில் சுற்றிப்பார்க்க வந்த பிரதமர் மோடி, பாட்னா வந்து தன்னுடன் மதிய உணவு அருந்தும்படி நிதீஷ் அழைப்பு விடுத்தும், அந்த அழைப்பை நிராகரித்தார் என்று லாலு பிரசாத் கூறினார்.