முக்கியப் பிரச்னைகளில் மத்திய அரசு சந்தித்து வரும் தோல்விகளை மறைக்கவே, மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் லக்னெளவில் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
நாட்டில் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், கங்கை நதி சுத்திகரிப்பு போன்ற பற்றியெரியும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் மத்திய அரசு படுதோல்வியடைந்துள்ளது.
மேலும், மக்களவைத் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு அளித்த வாக்குறுதி எதையும் பாஜக அரசால் நிறைவேற்ற முடியவில்லை. எனவே, இந்தத் தோல்விகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே அமைச்சரவை விரிவாக்கம் எனும் நாடகத்தை பாஜக அரங்கேற்றியிருக்கிறது.
இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் அரசியல் தலைவர்களைவிட முன்னாள் அதிகாரிகளுக்கு அதிக முக்கியத்தும் தரப்பட்டுள்ளது. மேலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தைப் பரப்பும் நோக்கம் இந்த விரிவாக்கத்தில் வெளிப்படுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிற கட்சிகளுக்கும், பாஜகவுக்கும் இடையே நிலவி வரும் பதற்றத்தை இந்த அமைச்சரவை விரிவாக்கம் அம்பலப்படுத்தியுள்ளது என்றார் மாயாவதி.