வங்கி ஊழியர்களின் தனிப்பட்ட விவரங்களைத் தகவல் உரிமைச் சட்டத்தின் (ஆடிஐ) கீழ் தெரிவிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கனரா வங்கியின் முன்னாள் ஊழியர் ஒருவர் கடந்த 2002-ஆம் ஆண்டு ஜனவரி முதல், 2006-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை பணிமாற்றம் செய்யப்பட்ட எழுத்தர்கள் (கிளர்க்) குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்திருந்தார்.
வங்கி ஊழியர்களின் தனிப்பட்ட விவரங்களை வெளியிடுவதிலிருந்து ஆர்டிஐ சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறி தகவல்களை வெளியிட கனரா வங்கி மறுத்துவிட்டது.
இதையடுத்து, தலைமைத் தகவல் அதிகாரியும் அவரது மனுவை நிராகரித்ததால், மத்தியத் தகவல் ஆணையத்தை (சிஐசி) அவர் அணுகி மேல்முறையீடு செய்தார். அந்த நபர் கேட்ட தகவல்களை அளிக்குமாறு கனரா வங்கிக்கு சிஐசி உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் கனரா வங்கி மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம் சிஐசி உத்தரவை உறுதி செய்தது. இதையடுத்து, இரண்டு உத்தரவுகளையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கனரா வங்கி மேல்முறையீடு செய்தது.
அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், "அந்த நபர் பொது நலன் கருதி இந்தத் தகவல்களைக் கேட்கவில்லை. தனிப்பட்ட நலன் கருதி கேட்டிருக்கிறார். எனவே, ஊழியர்களின் தகவல்களை கனரா வங்கி வெளியிடத் தேவையில்லை' என்று உத்தரவிட்டது.