ஆன்மிகம் இந்தியாவின் முக்கிய பலமாகத் திகழ்வதாக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாதின் கைரதாபாத் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற விநாயகர் பந்தலில் அவர் திங்கள்கிழமை பிரார்த்தனை செய்தார்.
அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் பிற பாஜக தலைவர்களும் வந்திருந்தனர்.
அப்போது வெங்கய்ய நாயுடு கூறியதாவது:
ஆன்மிகம் என்பது இந்தியாவின் மிக முக்கியமான சக்திகளில் ஒன்றாகும்.
சுதந்திரப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் விநாயகர் சதுர்த்தியைப் பயன்படுத்தி பிரிட்டீஷாருக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டியதன் மூலம், ஆன்மீகத்தின் சக்தியை உணரலாம்.
இந்தப் பந்தலில் நான் மேற்கொண்ட பிரார்த்தனையின்போது, இந்தியா செழிப்புடன் திகழ வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன் என்றார் அவர்.
கைரதாபாத் விநாயகர் பந்தலில் 50 அடி உயரம் கொண்ட பிரம்மாண்டமான விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்படத்தக்கது.
ஹைதராபாதில் கடந்த மாதம் 25-ஆம் தேதி உற்சாகமாகத் தொடங்கிய விநாயகர் சதுர்த்தி விழா, செவ்வாய்க்கிழமையுடன் (செப். 5) நிறைவடைகிறது.