புதுதில்லி: பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலைக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மறுப்பு தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் பிரபல பெண் பத்திரிகையாளரும், சமூக சேவகருமான கௌரி லங்கேஷ் நேற்று இரவு அவருடைய இல்லத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பத்திரிகையாளர்களும் மற்றும் சமூக சேவகர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி செய்தியாளர்களிடம் பேசும் பொழுது, ' கௌரி லங்கேஷின் மரணமானது நாட்டில் மீண்டும் வெறுப்பு, சுதந்தரமான கருத்துக்களுக்கு எதிரான விடாப்பிடித் தன்மை ஆகியவற்றின் கோர முகம் அதிகரித்து வருவதனைக் காட்டுகிறது' என்று தெரிவித்திருந்தார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, 'பாஜகவுக்கு எதிராக கருத்து சொல்பவர்களது குரல் அமைதியாக்கப்படுகிறது என்றும், இந்த விவகாரத்தில் மோடி ஏன் அமைதியாக இருக்கிறார் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் மத்திய சாலைப் போக்குவரது துறை அமைச்சர் நிதின் கட்காரி செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:
கௌரி லங்கேஷ் கொலையில் சரியான விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். மத்திய அரசுகோ, பாஜகவுக்கோ அல்லது அதன் எந்த சார்பு அமைப்புகளுக்கோ இந்த கொலையுடன் தொடர்பு கிடையாது.
அரசியல் கட்சி ஒன்றின் தலைவர் ஒருவர் பொறுப்பற்ற முறையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அது முழுக்க ஆதாரமற்ற ஒரு பொய்யாகும். இத்தகைய குற்றசாட்டுகள் துரதிர்ஷ்ட வசமானதும், ஜனநாயகத்துக்கு எதிரானதுமாகும்.
பிரதமர் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கவிலை என்பதால் அவரை இந்த குற்றத்துக்கு பொறுப்பு என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் ஒரு பிரதமர் எல்லா விஷயத்திற்கும் எதிர்வினையாற்ற வேண்டிய அவசியம் இல்லை. மேலும் அவர் வெளிநாட்டில் இருக்கிறார் என்பதனையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த குற்றம் கர்நாடக மாநில சட்டம் ஒழுங்கு சீர்கேட்டின் விளைவு. இதற்கு அந்த மாநிலத்தினை ஆளும் காங்கிரஸ் ஆட்சியே காரணம். இதற்கு பிரதமரை குறை கூறுவது சரியாகாது.
இவாறு நிதின் கட்காரி தெரிவித்தார்.