உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெளவில் புதன்கிழமை தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவையானது முதல் நாளிலேயே தோல்வியில் முடிந்தது.
சார்பக் - டிரான்ஸ்போர்ட் நகர் வரை செல்லும் மெட்ரோ ரயில், பாதி வழியில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது. இதனால், அதில் பயணித்த நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலான போராட்டத்துக்குப் பிறகு அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். தங்களது முதல் மெட்ரோ ரயில் அனுபவம் மோசமாக அமைந்ததாக பல பயணிகள் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகளைத் தொடங்க அந்த மாநில அரசு திட்டமிட்டு, அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், முதல்கட்டமாக சார்பக் - டிரான்ஸ்போர்ட் நகர் வரையிலான சேவைகள் புதன்கிழமை தொடங்கப்பட்டன. காலை 7 மணிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் மெட்ரோ ரயில் புறப்பட்டது. அதற்கு அடுத்த 15 நிமிடங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதனால், ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. அப்போது மின் விளக்குகள், குளிரூட்டும் சாதனங்கள் எதுவும் இயங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பயணிகள் ரயிலுக்குள் சிக்கியிருந்தனர். பின்னர் அவசர வழி மூலமாக ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.