உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் அரசு மருத்துவமனையில் 49 குழந்தைகள் உயிரிழந்தது குறித்த விசாரணை நடத்திய மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தங்கள் அறிக்கையை மாநில அரசிடம் தாக்கல் செய்துள்ளனர்.
இத்தகவலை மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சித்தார்த் நாத் தில்லியில் வியாழக்கிழமை தெரிவித்தார். உத்தரப் பிரதேச அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த ஊரான கோரக்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் ஒரே வாரத்தில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் உயிரிழந்தனர். இந்த சோகம் மறைவதற்குள் கடந்த சில நாள்களுக்கு முன்பு அம்மாநிலத்தின் ஃபரூக்காபாத் மருத்துவமனையில் அடுத்தடுத்து 49 குழந்தைகள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த மாவட்ட ஆட்சியர், தலைமை மருத்துவ அதிகாரி, தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர். உரிய சிகிச்சை கிடைக்காததுதான் குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தனது அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பித்துள்ளது.