மும்பையில் வெடி விபத்து: கட்டடத் தொழிலாளர்கள் 6 பேர் பலி

மும்பையில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றில் நேரிட்ட வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் 11 பேர் பலத்த காயமடைந்தனர்.

மும்பையில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றில் நேரிட்ட வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் 11 பேர் பலத்த காயமடைந்தனர்.
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, வெடி விபத்து காரணமாக கட்டடம் முழுவதும் தீ பரவியது. அதனை தீயணைப்பு வீரர்கள் பெரும் போராட்டத்துக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதுகுறித்து போலீஸார் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
மும்பை புறநகரான ஜுஹூ பகுதியில் அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அதன் தரைத் தளத்தில் கட்டடத் தொழிலாளர்கள் 17 பேர் தங்கியிருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், புதன்கிழமை இரவு அங்கு பெரும் வெடி விபத்து நேரிட்டது. இதைத் தொடர்ந்து கட்டடத்தில் வேகமாகத் தீ பரவியது. இந்த விபத்தில் சிக்கிய 17 பேரை அருகிலிருந்தவர்களும், தீயணைப்புப் படை வீரர்களும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் அதனை திட்டவட்டமாகக் கூற முடியாது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com