புதுதில்லி: இந்திய ராணுவத்தில் பணியாற்றும் சேவைப்பிரிவு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மறுக்கப்படுவதாக ராணுவ அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்திய ராணுவத்தில் சிக்னல் உள்ளிட்ட சேவை பிரிவுகளில் லெஃப்டினன்ட் கர்னலாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு திட்டமிட்டு பதவி உயர்வு மறுக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் ராணுவ அதிகாரிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், சிக்னல் உள்ளிட்ட சேவைபிரிவு ராணுவ அதிகாரிகள், போர்முனையில் பீரங்கி உள்ளிட்ட படைப்பிரிவு அதிகாரிகளுக்கு இணையாகவே பணியமர்த்தப்படுவதாகவும், போர்முனையில் மற்ற ராணுவ அதிகாரிகளைப்போலவே ஆபத்துகளை சேவைபிரிவு அதிகாரிகளும் எதிர்கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராணுவ பணியமர்த்தலில் மற்ற அதிகாரிகளுக்கு இணையாக பணியாற்றும் சேவைப்பிரிவு அதிகாரிகள் பதவி உயர்வில் மட்டும் புறக்கணிக்கப்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ சேவைபிரிவு அதிகாரிகளுக்கு மிகக்குறைந்த அளவிலேயே பதவி உயர்வு அளிக்கப்படுவதாக ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பட்டாலியன் மற்றும் ப்ரிகேடுகளின் தளபதிகளுக்கான வயது வரம்பைக் குறைக்க பரிந்துரை செய்யப்பட்டதை ஏற்றுக் கொள்ள நீதிமன்றம் அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தது. இந்த உத்தரவை எதிர்க்காமல் பதவி உயர்வில் பாரபட்சம் காட்டுவதை மட்டும் சுட்டிக்காட்டி தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது.