புதுதில்லி: மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு சதவீத அகவிலைப்படி உயர்வினை மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சமீபத்தில் மாற்றி அமைக்கப்பட்டது. அதன் பிறகு வெளிநாட்டு பயணங்களிலிருந்து பிரதமர் மோடி திரும்பிய பிறகு முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் இறுதியில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு சதவீத அகவிலைப்படி உயர்வினை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதிகரித்து வரும் விலைவாசி உயர்வினை கருத்தில் கொண்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை ஒன்றாம் தேதி முதல் முன்தேதியிட்டு இந்த உயர்வு அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது.
இதன் காரணமாக 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 61 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் பெறுவார்கள் என்று தெரிகிறது.