இந்தியா-பெலாரஸ் இடையே ராணுவ ஆயுதத் தயாரிப்பை மேம்படுத்துவது உள்பட 10 முக்கிய ஒப்பந்தங்கள் செவ்வாய்க்கிழமை கையெழுத்தாகின.
இருநாள் பயணமாக இந்தியா வந்துள்ள பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லூகாஸ்ஹென்கோவை பிரதமர் மோடி தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
அப்போது இரு நாடுகளும் இணைந்து ராணுவ ஆயுதத் தயாரிப்பை மேம்படுத்துவது, வர்த்தக, பொருளாதர ஒத்துழைப்பு உள்பட 10 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரஸும் இந்தியாவும் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு 25 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இரு நாடுகள் இடையே பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து மோடியும், அலெக்சாண்டரும் ஆலோசனை நடத்தினர். பெலாரஸ் அதிபருடன் அந்நாட்டின் தொழில்துறையைச் சேர்ந்த பலரும் வந்துள்ளனர்.
இந்தச் சந்திப்பு குறித்து மோடி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின்கீழ் பெலாரஸ் உற்பத்தித் துறை, ராணுவ ஆயுதத் தயாரிப்பு ஆகியவை தொடர்பான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டருடன் இணைந்து இரு நாட்டு உறவில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளோம்.
பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, கல்வி, விளையாட்டுத் துறை உள்பட பல்வேறு பிரிவுகளில் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளோம்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, திங்கள்கிழமை இரவு அலெக்சாண்டர் லூகாஸ்ஹென்கோ தில்லிக்கு வந்தார்.