தில்லியில் கதவு திறந்த நிலையில் பயணிகளுடன் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வடக்கு தில்லி-குருகிராமை இணைக்கும் மஞ்சள் நிற வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த வழித்தடத்தில் உள்ள சாவ்ரி பஜார்- கஷ்மீரி கேட் ரயில் நிலையம் இடையே திங்கள்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் மெட்ரோ ரயில் ஒன்று, கதவு திறந்த நிலையில் ஓடியது.
அப்போது, ரயில் பெட்டியில் ஏராளமான பயணிகள் இருந்ததால் இச்சம்பவம் பயணிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "ஒரு பெட்டியின் ஒரு கதவில் மட்டுமே பிரச்ணை இருந்தது.
அந்தப் பெட்டியில் டிஎம்ஆர்சி ஊழியர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பின்னர், ரயில் இயக்கத்தில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு அந்த ரயில் விஷ்வ வித்யாலயா மெட்ரோ ரயில் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது' என்றார்.
இதேபோன்று தானியங்கி கதவு திறந்த நிலையில் ரயில் இயக்கப்பட்ட சம்பவம் கடந்த ஜூலை, 2014-இல் தில்லி மெட்ரோ ஒருங்கிணைப்பில் நிகழ்ந்தது.
கிட்டோர்னி மற்றும் அர்ஜங்கர் ரயில் நிலையங்கள் இடையே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு ரயில் இயக்கத்தை அதன் ஆபரேட்டர் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.