ஏற்றுமதி சம்பந்தப்பட்ட பத்திரச் சான்றிதழ் தருவதற்கு தன்னிடம் லஞ்சம் கேட்டதாக மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) துறை அதிகாரிக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கையில் (எஃப்ஐஆர்) கூறப்பட்டுள்ளதாவது:
ஏற்றுமதி தொழில் சம்பந்தமாக பத்திரச் சான்றிதழ் கோரி ஜிஎஸ்டி துறையில் கடந்த 1-ஆம் தேதி தொழிலதிபர் ஒருவர் விண்ணப்பித்திருந்தார். அதுதொடர்பாக அலுவலகத்தை சில தினங்களாக அவர் அணுகி வந்தார். இருப்பினும், அவரது விண்ணப்பம் பரிசீலனை செய்யப்படவில்லை. இதையடுத்து, அந்த அலுவலகத் தொலைபேசிக்குத் தொடர்பு கொண்ட அவர் தன்னிடம் பேசிய தீபக் என்ற அதிகாரியிடம் புகார் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், அவரோ விண்ணப்பத்தை பரிசீலிக்க ரூ.5,000 தருமாறு கேட்டதாக புகார் எழுந்துள்ளது என்று அந்த எஃப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அதிகாரி ஒருவருக்கு எதிராக சிபிஐ ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆனால், அவர் சேவை வரித் துறையில் பணிபுரிந்தபோது எழுந்த லஞ்சப் புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.