புது தில்லி: ஹிந்தி மொழி பேசுபவர்கள், தங்கள் மொழியைப் போல பிற மொழி பேசுபவர்களையும் மதித்து, பிற மொழிகளுக்கும் உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த வலியுறுத்தியுள்ளார்.
ஹிந்தி தின விழாவில் கலந்து கொண்டு பேசிய ராம்நாத் கோவிந்த், ஹிந்தி நமது ஆட்சி மொழியாக இருந்த போது கூட, தற்போதும் நாட்டின் பல பகுதிகளில் ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு இருக்கிறது என்று கூறினார்.
பெங்களூர் மெட்ரோ ரயில் சேவையில் ஹிந்தி மொழியில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகளை எடுக்க போராட்டம் நடத்தப்பட்டது, தமிழகத்தில் ஹிந்தி மொழிக்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் போன்றவை, பிற மொழி பேசுபவர்கள் மீது ஹிந்தி திணிக்கப்படுவதாக அவர்கள் கருதுவதே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஹிந்தி பேசும் நபர்கள், தமிழர்களைப் பார்த்ததும் வணக்கம் என்றும், சீக்கியர்களிடம் 'சத் ஸ்ரீ அகல்' என்றும், முஸ்லிம் மக்களிடம் 'அதாப்' என்ற வார்தைகளைக் கூறி வாழ்த்துகளை பரிமாறிக் கொள்ளலாம் என்றும் ஆலோசனை வழங்கினார்.
இதே நிகழ்ச்சியில் முன்னதாக பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ஹிந்தி மொழி வளர்ச்சி அடைய, ஹிந்தி பேசுபவர்கள், பிற மொழியில் இருக்கும் வார்த்தைகளையும் அறிந்து கொண்டு பேச வேண்டும் என்று வலியுறுத்தினார்.