ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது.
இதுதொடர்பான விசாரணைக்கு அவர் வியாழக்கிழமை (செப்.14) ஆஜராக வேண்டும் என்று அந்த அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு அப்போதைய மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் நெருக்கடிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏர்செல் நிறுவனத் தலைவர் சிவசங்கரன் அளித்த புகாரின்பேரில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக தில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மேக்சிஸின் துணை நிறுவனமான குளோபல் கம்யூனிகேஷன் லிமிடெட், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.5000 கோடியை முதலீடு செய்ய அனுமதி கோரியிருந்ததாகவும், அதற்கு அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சட்ட விரோதமாகஅனுமதி அளித்ததாகவும் கூறப்பட்டிருந்தது.
விதிமுறைகளின்படி, சுமார் 600 கோடிக்கு மேற்பட்ட வெளிநாட்டு முதலீட்டுக்கு பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுதான் அனுமதி அளிக்க வேண்டும். அப்படியிருக்கும்போது, ரூ.5000 கோடி வெளிநாட்டு முதலீட்டுக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சட்டவிரோதமாக அனுமதி வழங்கியிருப்பது குறித்தும் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ தற்போது அழைப்பாணை அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ஐஎன்எக்ஸ் நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரிய அனுமதியை முறைகேடாக பெற்றுத் தந்ததாகக் கூறி கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.