நாட்டின் பாதுகாப்பு குறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவை இல்லை: நிர்மலா சீதாராமன்
வாரணாசி: இந்தியாவின் எல்லைகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது என்றும் நாட்டின் பாதுகாப்பு குறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவை இல்லை என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ராணுவ அமைச்சராக பொறுப்பேற்ற பின் நிர்மலா சீதாராமன் முதன் முதலாக, உத்தரபிரதேசத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசிக்கு சென்றார்.
அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், தூய்மை பணியில் சிறந்து விளங்கிய ராணுவ படை பிரிவுகளுக்கு அவர் சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய உள்துறை அமைச்சகமும், இந்திய ராணுவமும், எந்தவொரு வெளிநாட்டு அச்சுறுத்தல்களிலிருந்தும் மக்களை காப்பாற்றுவதற்கு போதுமானதாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் காஷ்மீர், டோக்லாம் பீடபூமி உள்ளிட்ட எல்லைப்பகுதிகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளதாகவும், தேசத்தின் எல்லைகளை பாதுகாப்பதில் மத்திய பாதுகாப்பு அமைச்சகமும், நமது வீரர்களும் மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பதில் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வருகின்றனர் என்று மக்களுக்கு உறுதியளிக்கிறேன். எனவே, பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் அமைதியாக வாழலாம் என்று கூறினார்.
பாகிஸ்தானால் மேற்கொள்ளப்பட்டு வரும் போர்நிறுத்த மீறல் குறித்து அமைச்சகம் கவனமாக கண்காணித்து வருகிற நேரத்தில் போர் நிறுத்த மீறல்கள் தொடர்பாக நான் துல்லியமாக பேசமாட்டேன், ஆனால், நாங்களும் மற்றும் உள்துறை அமைச்சகமும் போர் நிறுத்த மீறல்களை மிக கவனமாக கண்காணித்து வருகிறது என்றார்.
மேலும், “இந்திய எல்லைகள் பாதுகாப்புடன் இருக்கின்றன, இந்திய நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருவகிறது. நாட்டின் பாதுகாப்பு குறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவை இல்லை என்றறு கூறிய சீதாராமன் எந்தவித பிரச்னைகள் வந்தாலும் எதிர்கொள்ள நமது இந்திய ராணுவம் தயாராகவே உள்ளது”, என்று தெரிவித்தார்.
பாதுகாப்புத் துறை அமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட நிர்மலா சீதாராமன், ராணுவத்தின் பல்வேறு தளங்களில் கவனம் செலுத்திவருகிறார். “தினமும் காலையில் முப்படைத் தளபதிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் குடும்ப நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்”, என பாதுகாப்புத் துறை அமைச்சகம். தொடக்கத்திலேயே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.