ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பாக, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், சிபிஐ முன் வியாழக்கிழமை ஆஜராக மறுத்துவிட்டார்.
கடந்த 2006-ஆம் ஆண்டில், மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் ரூ.5,129 கோடியை முதலீடு செய்வதற்கு சட்ட விரோதமாக ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதில், கார்த்தி சிதம்பரத்தின் தலையீடு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்துவதற்காக, வியாழக்கிழமை நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது.
ஆனால், அவர் தில்லியில் உள்ள சிபிஐ தலைமையகம் முன் நேரில் ஆஜராகவில்லை. இதுதொடர்பாக, அவரது வழக்குரைஞர் அருண் நடராஜன் கூறுகையில், ""சிபிஐக்கு தபால் மூலமாக கார்த்தி சிதம்பரம் பதிலளித்திருக்கிறார். அவரது கடிதம், சிபிஐக்கு காலை 10.30 மணிக்கு கிடைத்தது'' என்றார்.
அந்த பதிலில் கார்த்தி சிதம்பரம் கூறியிருப்பதாவது:
ஏர்செல் - மேக்சிஸ் வழக்கை விசாரித்து வந்த தனி நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து விட்டது. வழக்கு விசாரணையையும் முடித்து வைத்து விட்டது.
நடந்து முடிந்த ஒரு வழக்குக்காக, நேரில் ஆஜராகுமாறு சிபிஐ அழைப்பாணை அனுப்ப முடியாது' என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஏர்செல் நிறுவனத்தில் ரூ.5,129 கோடியை முதலீடு செய்வதற்கு அனுமதி கோரி, மேக்சிஸ் நிறுவனத்தின் மோரீஷஸ் கிளையான குளோபல் கம்யூனிகேஷன்ஸ் விண்ணப்பிருந்தது.
ரூ.600 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டு முதலீடுகளுக்கு பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியமாகும். ஆனால், அந்த முதலீட்டுக்கு ப.சிதம்பரம் ஒப்புதல் அளித்திருந்தார்.