நெல்லை அருகே சாலையோரம் நின்றிருந்த தனியார் சுற்றுலா பேருந்து மீது சிமெண்ட் லாரி மோதிய விபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 2 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தனியார் பேருந்து மூலம் தமிழகத்திற்கு சுற்றுலா வந்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்த்த அவர்கள் கன்னியாகுமரிக்கு செல்லும் வழியில், இன்று காலை நெல்லை அருகே டக்கரம்மாள்புரம் என்ற இடத்தில் பேருந்தை சாலையோரம் நிறுத்தியுள்ளனர்.
அப்போது, திண்டுக்கல்லில் இருந்து சிமெண்ட் ஏற்றிக் கொண்டு மார்த்தாண்டம் நோக்கிச் வந்த லாரி, சாலையோரம் நின்றிருந்த சுற்றுலா பேருந்து மீது பயங்கர வேகத்தில் மோதியுள்ளது. இதில் பேருந்தின் முன்னால் நின்று கொண்டிருந்த ரத்தினமாணிக்கம், நாகரத்தினம், வெங்கடராமராவ், ராம்மோகன ராவ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்த சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், காயமடைந்தவர்களையும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மேலும் ஒருவர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து, லாரி ஓட்டுநர் ரசூல்ராஜாவை போலீஸார் கைது செய்து விசாரணை செய்ததில் தூக்கக் கலக்கத்தில் லாரியை ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.