புது தில்லி: இசட் பிளஸ் பாதுகாப்புப் பெற்று வரும் முக்கியப் பிரமுகர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
நாட்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு மோடி தலைமையிலான அரசு, இந்தியா முழுவதும் சுமார் 475 பேருக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கூட 350 முக்கியப் பிரமுகர்களுக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், மேலும் சில அரசில்வாதிகள் தங்களுக்கு தேசிய பாதுகாப்புப் படையின் பாதுகாப்புக் கேட்டு கோரிக்கை வைத்திருக்கும் நிலையில், ஒரு சில முக்கிய பிரமுகர்களுக்கு தேசிய பாதுகாப்புப் படை மற்றும் துணை ராணுவப் படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதில், தேசிய பாதுகாப்புப் படையை மட்டும் விலக்கிக் கொள்ள பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இதில், திமுக தலைவர் கருணாநிதி, பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோருக்கு தேசிய பாதுகாப்புப் படை மற்றும் துணை ராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, இவர்களுக்கு வழங்கப்படும் தேசிய பாதுகாப்பு படை பாதுகாப்பை விலக்கிக் கொள்வது குறித்து பரிசீலிப்பதாகவும், இந்த தலைவர்கள் பயணம் மேற்கொள்ளும் போது கூடுதல் பாதுகாப்பு வழங்குவது குறித்து கருத்தில் கொள்ளப்படும் என்றும் மத்திய அரசு கூறுகிறது.
மேற்கண்ட அரசியல் தலைவர்களுக்கு நாட்டிலேயே மிக உயரிய இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. எக்ஸ் முதல் இசட் வரை தலைவர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தலுக்கு ஏற்ப பாதுகாப்பு வழங்கப்படும். இசட் பிளஸ் பாதுகாப்பில் ஒரு தலைவருக்கு 30 வீரர்கள் பாதுகாப்பு வழங்குவார்கள். ஒய் பிளஸ் பாதுகாப்பில் 11 வீரர்கள் பாதுகாப்பு அளிப்பார்கள்.
மத்திய அரசால் வழங்கப்படும் பாதுகாப்பைப் பெறும் முக்கிய பிரமுகர்கள் அதிகம் கொண்ட மாநிலமாக உத்தரப்பிரதேசம் விளங்குகிறது.
நாட்டின் மிகவும் பணக்காரரான முகேஷ் அம்பானி, தனக்கு இசட் பிளஸ் பாதுகாப்பும், தனது மனைவி நீதா அம்பானிக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பும் பெற்றுள்ளார். இதற்கான செலவுத் தொகையையும் அவர் செலுத்தி வருகிறார் என்பது கூடுதல் தகவல்.