ரோஹிங்கயா அகதிகளை திரும்ப அழைத்துக் கொள்ளுமாறு மியான்மருக்கு இந்தியா நெருக்கடி அளித்து வருவதாக வங்கதேசம் தெரிவித்துள்ளது.
மியான்மரில் நடைபெற்று வரும் இனக்கலவரத்தின் காரணமாக அந்நாட்டிலிருந்து லட்சக்கணக்கான ரோஹிங்கயா இனத்தவர்கள் அண்டை நாடுகளான வங்கதேசம், இந்தியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து வங்கதேசப் பிரதமரின் செய்தித் துறைச் துணைச் செயலர் நஸ்ருல் இஸ்லாம், வெள்ளிக்கிழமை கூறியதாவது:
வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவை
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது அவர், ரோஹிங்கயா அகதிகளை மியான்மருக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்று வங்கதேச அரசு எடுத்துள்ள நிலைப்பாட்டுக்கு இந்தியா ஆதரவளிப்பதாகக் கூறினார். மேலும், மற்ற நாடுகளில் தஞ்சமடைந்திருக்கும் ரோஹிங்கயா மக்களை திரும்பி அழைத்துக் கொள்ளுமாறு மியான்மருக்கு இந்தியா அழுத்தம் கொடுத்து வருவதாகவும் சுஷ்மா தெரிவித்ததாக நஸ்ருல் இஸ்லாம் கூறினார்.