காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல். இவரை அடுத்த காங்கிரஸ் தலைவராக நியமிக்க வேண்டி நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்கள் பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், மறைந்த விமானப்படைத் தளபதிக்கு செலுத்திய இரங்கல் செய்தியில் ராகுல் தவறிழைத்தார். பின்னர் ட்விட்டரில் அதனை சரிசெய்தார்.
விமானப்படையின் முன்னாள் தளபதி அர்ஜன் சிங், மாரைடப்பு காரணமாக சனிக்கிழமை இரவு காலமானார். இந்நிலையில், அவருக்கு இரங்கல் செலுத்தும் விதமாக வெளியான ராகுலின் ட்வீட் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
அதில், ஏர் மார்ஷல் அர்ஜன் சிங் என்று குறிப்பிட்டார். ஏர் மார்ஷல் என்பது 4 நட்சத்திரங்கள் வென்ற வீரரை குறிப்பது. ஆனால், அர்ஜன் சிங் 5 நட்சத்திரங்களை வென்ற ஒரே விமானப்படைத் தளபதி ஆவார். எனவே அவரை மார்ஷல் ஆஃப் இந்தியன் ஏர்ஃபோர்ஸ் என்று அழைக்க வேண்டும்.
பின்னர், தனது இரங்கல் ட்வீட்டை சரிசெய்த ராகுல், அதனை மறுபடி பதிவேற்றம் செய்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கர்நாடகத்தில் அம்மாநில முதல்வர் மலிவு விலை உணவகங்களை திறந்து வைத்த நிகழ்ச்சியில் தலைமை தாங்கிய ராகுல், அப்போது பேசியது அனைவருக்கும் நினைவிருக்கலாம். மேலும், இதுபோன்ற குழப்பங்களை அவ்வப்போது ராகுல் ஏற்படுத்தி வருவது காங்கிரஸ் கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.