இந்திய அணுசக்தித் துறை செயலர் சேகர் பாசுவின் பதவிக்காலம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், இந்திய அணுசக்தி துறை செயலராக மூத்த விஞ்ஞானி சேகர் பாசு நியமிக்கப்பட்டார். அவரது இந்த பதவிக்காலம் கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைய இருந்தது. எனினும், சேகர் பாசுவின் பதவிக்காலத்தை மத்திய அரசு கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீட்டித்தது. அப்போது அவருக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, அவரது பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைய இருந்தது. ஆனால், சேகர் பாசுவின் பதவிக்காலத்தை மத்திய அரசு 2ஆவது முறையாக மீண்டும் நீட்டித்துள்ளது.
இதுகுறித்து மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சேகர் பாசுவின் பதவிக்காலம் 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி வரையிலும், நியமனங்களுக்கான கேபினட் குழு நீட்டித்துள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளேது.
அணுசக்தித் துறையில் சிறந்த திறமை கொண்டவராக சேகர் பாசு அறியப்படுகிறார். அணுசக்தித் துறையில் இந்தியா முக்கிய பங்குதாரராக தரம் உயர்த்திக் கொள்வதற்கு, சேகர் பாசு முக்கிய பங்களிப்பை அளித்துள்ளார். பாபா அணு ஆராய்ச்சி மைய இயக்குநராகவும், அணுசக்தி மறுபயன்பாட்டு வாரியத்தின் தலைமை நிர்வாகியும் சேகர் பாசு உள்ளார். கல்பாக்கத்தில் அணு ஆராய்ச்சி மையம் அமைக்கப்படுவதற்கு சேகர் பாசு முக்கியக் காரணமாவார். அவரது சிறப்பான பணியைப் பாராட்டி, அவருக்கு பத்ம ஸ்ரீ விருதை அளித்து மத்திய அரசு கௌரவித்துள்ளது.