கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோயிலில் காணாமல் போனதாகக் கருதப்பட்ட 12 வைரக் கற்களை சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் மீட்டுள்ளனர். அவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
அவற்றை எவராவது திருடிச் சென்றிருக்கலாம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், கோயில் வளாகத்துக்குள்ளேயே வைரக் கற்கள் மீட்கப்பட்டிருப்பது குறிப்படத்தக்கது.
18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள பாதாள அறைகளில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய தங்க, வைர நகைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இது, தேசிய அளவில் பெரும் பரபரப்பையும், வியப்பையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், சுவாமிக்கு அணிவிக்கும் ஆபரணங்களில் பதிக்கப்பட்டிருந்த 26 வைரக் கற்கள் மாயமானதாக கடந்த ஆண்டு புகார் எழுந்தது.
இதுதொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தி வந்தனர். அவற்றை எவராவது திருடிச் சென்றிருக்கலாம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், அவற்றில் 12 வைரக் கற்களை கோயில் வளாகத்திலேயே புலனாய்வுக் குழுவினர் மீட்டுள்ளனர். மீதமுள்ள வைரங்களைக் கண்டறியும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
மீட்கப்பட்ட வைரக் கற்களின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் எனத் தெரிவித்துள்ள போலீஸார், அவற்றை மதிப்பிடும் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளனர்.