பெட்ரோல்-டீசல் ஆகியவற்றின் விலை உயர்வு குறித்து மத்திய இணை அமைச்சர் அல்ஃபோன்ஸ் கண்ணந்தானம் தெரிவித்த கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தில்லியில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு மத்திய இணை அமைச்சர் அல்ஃபோன்ஸ் கண்ணந்தானம் அளித்த பேட்டியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பெட்ரோலை யார் வாங்குகின்றனர்? கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வைத்திருப்பவர்கள்தான், பெட்ரோலை வாங்குகின்றனர். நிச்சயம், அவர்கள் பட்டினியாக இல்லை. அவர்கள் பெட்ரோல், டீசலை வாங்கக் கூடுதல் பணம் செலவிடலாம்.
மிகவும் வறுமையில் இருப்பவர்களுக்கு நல்லது செய்வதற்காகவே, அரசு பணியாற்றி வருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் மின்சார வசதி இருப்பதை உறுதி செய்து வருகிறது. அனைவருக்கும் வீடுகள், கழிப்பறைகளை கட்டித் தருகிறது. இதற்காக ஏராளமான நிதியை அரசு செலவிடுகிறது. இதற்கு நிதி திரட்டவே, பணம் செலவிடும் திறனைக் கொண்டவர்கள் மீது மத்திய அரசு வரியை விதிக்கிறது என்று அல்ஃபோன்ஸ் கண்ணந்தானம் கூறினார்.
நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யப்படும் முறை அமல்படுத்தப்பட்ட பிறகு, பெட்ரோல்-டீசல் விலை கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் அதிகரித்துள்ளது. இதையடுத்து, பெட்ரோல்-டீசலை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் நடைமுறையை கைவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும், தனது முடிவில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
இதுகுறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில், "சர்வதேசச் சந்தையில் கடந்த 3 மாதங்களில் பெட்ரோல் விலை 18 சதவீதம் உயர்ந்துள்ளது; ஆனால் இந்தியாவில் 4 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது; இதேபோல், டீசலின் விலையும் சர்வதேசச் சந்தையில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், இந்தியாவில் 4 சதவீதமே உயர்ந்துள்ளது' என்று நியாயப்படுத்தியிருந்தார்.
இத்தகைய சூழ்நிலையில், மத்திய இணையமைச்சர் அல்ஃபோன்ஸ் கண்ணந்தானமும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை நியாயப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.