கேரளத்தில் திரைப்பட நடிகை கடத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்ட வழக்கில், மலையாள திரைப்பட இயக்குநர் நாதிர்ஷாவிடம் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகர் தீலிபின் நெருங்கிய நண்பரான நாதிர்ஷா, காவல் துறையின் விசாரணைக்காக, கொச்சியில் உள்ள காவல் துறை மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை விசாரணைக் குழு முன் ஆஜரானார். அவரிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
இதற்கு முன், காவல் துறை விசாரணைக் குழு முன் நாதிர் ஷா கடந்த வெள்ளிக்கிழமை நேரில் ஆஜரானார். ஆனால், அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், அவரிடம் விசாரணை நடத்தப்படவில்லை. இந்நிலையில், அவரிடம் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த நாதிர்ஷா, இந்த வழக்கில் தனக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை நிரூபிப்பதற்கான அனைத்து விவரங்களையும் காவல் துறையிடம் தெரிவித்து விட்டு வந்ததாகக் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:
நடிகர் திலீப் குற்றமற்றவர். அவர் மீது இன்னமும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. நடிகை கடத்தலில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபரான பல்சர் சுனிக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
இதை காவல் துறையிடம் தெரிவித்துவிட்டேன் என்றார் அவர்.
இதனிடையே, நாதிர்ஷாவின் முன்ஜாமீன் மனு, கேரள உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது. எனினும், அவருக்கு முன் ஜாமீன் வழங்குவதற்கு காவல் துறை தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பல்சர் சுனியுடன் நாதிர்ஷா தொலைபேசியில் உரையாடியதை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும் காவல் துறை கூறி வருகிறது.
அந்த நடிகை, கொச்சியில் கடந்த பிப்ரவரி மாதம், காரில் கடத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக, பல்சர் சுனி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கடத்தலுக்கு சதித் திட்டம் தீட்டியதாக, நடிகர் திலீப் கடந்த ஜூலை 10-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது சிறையில் இருக்கும் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இந்நிலையில், ஜாமீன் கோரி திலீப் தாக்கல் செய்துள்ள புதிய மனு, அங்கமாலி மாஜிஸ்
திரேட் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.