இந்தியா முழு வீச்சில் வேகமாக வளர்ந்து வருகிறது என்று உலக வங்கியின் தலைவர் ஜிம் யாங் கிம் கூறினார்.
நியூயார்க் நகரில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுப் பேசிய அவர், மேலும் கூறியதாவது:
வளரும் நாடுகள் தங்கள் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, அதிக முதலீடுகளைக் கவர வேண்டும். கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளிலும், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதிலும் அதிக முதலீடுகளைக் கவர வேண்டும்.
இந்தியாவுடன் ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் வளர்ந்து வருகின்றன. வளரும் நாடுகளில் வளர்ச்சி ஏறுமுகத்துடனே காணப்படுகிறது. நிகழாண்டில், இந்த வளர்ச்சி இன்னும் வலிமையானதாக இருக்கும்.
கடந்த 2016-ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.8 சதவீதமாக இருந்தது. நிகழாண்டில் இந்த வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும்.
தற்போதைய சாதகமான சூழலைப் பயன்படுத்தி, அரசு மற்றும் தனியார் துறைகள், இரு தரப்பும் பயன்பெறும் வகையில் அதிக ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும். ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி- கடன் சுமை ஆகியவற்றுக்கான விகிதத்தை உலக வங்கி உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. ஆப்ரிக்காவில், பொருளாதார வளர்ச்சி-கடன் சுமை ஆகியவற்றுக்கு இடையேயான விகிதம், சமாளிக்கக் கூடிய அளவில் உள்ளது.
ஒருவேளை ஒரு நாட்டில் கடன் பிரச்னை அதிகம் இருப்பதாகக் கருதினால், அந்நாட்டுக்கு நிதியுதவி வழங்க உலக வங்கி முன் வராது. ஏனெனில், சர்வதேச செலாவணி நிதியத்தை உலக வங்கி பின்பற்றி வருகிறது என்றார் அவர்.