ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பொதுப் பணித் துறை அமைச்சர் அக்தர் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் வியாழக்கிழமை கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில், காயம் எதுவுமின்றி அமைச்சர் உயிர் தப்பினார். ஆனால், பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக, போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அமைச்சர் அக்தர், திரால் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளைப் பார்வையிடுதற்காக வியாழக்கிழமை அங்கு சென்றார். செல்லும் வழியில், பகல் 11.45 மணியளவில் அமைச்சரின் வாகனத்தின் மீதும், உடன் சென்ற வாகனங்கள் மீதும் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினர். எனினும், இத்தாக்குதலில் இருந்து அமைச்சர் உயிர் தப்பினார். இந்தத் தாக்குதலில் குலாம் நிபி திராக் (56) என்பவரும், பிங்கி கெளர் (17) என்பவரும் உயிரிழந்தனர். 2 போலீஸார் உள்பட 6 பேர் காயமடைந்தனர். அவர்களில் வாகன ஓட்டுநர் பலத்த காயம் அடைந்ததால், உயர் சிகிச்சைக்காக, உடனடியாக அவர் ஸ்ரீநகருக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்றார் அந்த போலீஸ் அதிகாரி.
இதனிடையே, திரால் தொகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டுவரும் வேளையில் அதை சீர்குலைக்கும் நோக்கத்துடன் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமைச்சர் அக்தர் குற்றம் சாட்டினார்.