உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் கொலை வழக்கில் முன்னாள் சர்வதேச கபடி வீரர் ராஜு குமாரை (33) தில்லியின் புறநகர்ப் பகுதியில் போலீஸார் கைது செய்துள்ளனர்.
காஜியாபாத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகரான கஜேந்திர பாடி மற்றும் அவரது சகாவான பல்பீர் சிங் சௌஹான் ஆகியோர் மீது, இம்மாதம் 2-ஆம் தேதியன்று மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் கஜேந்திர பாடி உயிரிழந்தார். பல்பீர் சிங் காயமடைந்தார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த உத்தரப் பிரதேச போலீஸார், நரேந்தர் என்ற நபரை கடந்த 11-ஆம் தேதி கைதுசெய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, இந்தக் கொலை வழக்கில் மேலும் சிலருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
குறிப்பாக, ஷாகிபாபாத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ-வான அமர்பால் சர்மா என்பவர்தான் கஜேந்திர பாடியைக் கொலை செய்வதற்கு ரூ.10 லட்சம் தருவதாகக் கூறி, முன்பணமாக ரூ.55 ஆயிரத்தைக் கொடுத்தார் என்ற தகவல் கிடைத்தது.
மேலும், இந்தக் கொலையில் முன்னாள் சர்வதேச கபடி வீரர் ராஜுகுமாருக்குத் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அவர்களைக் கைது செய்ய போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். எனினும், இருவரும் தலைமறைவாக இருந்தனர். அவர்களுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணைகளை நீதிமன்றம் பிறப்பித்தது.
இந்நிலையில், தில்லியின் புறநகர்ப் பகுதியான சிராஸ்பூரில் ராஜுகுமார்பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு புதன்கிழமை சென்ற போலீஸார், அவரைக் கைது செய்தனர்.