மும்பை: பத்திரிக்கையாளராகவும், இலக்கியம் மற்றும் பிரபல எழுத்தாளராகவும் திகழ்ந்த அருண் சாது (76) இதயநோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை மும்பையில் காலமானார்.
கடந்த 1942-ஆம் ஆண்டில் பிறந்த அருண் சாது பல்வேறு ஆங்கில பத்திரிக்கைகளில் பணியாற்றியவர். புனே பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் துறையில் பேராசிரியராகவும் திறம்பட செயல்பட்டவர். ஹிந்தி, மராத்தி மற்றும் ஆங்கிலத்தில் பல்வேறு புத்தகங்களை சாது எழுதியுள்ளார்.
குறிப்பாக சிவசேனா கட்சியின் எழுச்சி, சீன புரட்சி, வியட்நாம் போர் போன்ற புத்தகங்கள் இன்றளவும் பிரபலமாக பேசப்பட்டு வருகின்றன. சாகித்திய அகாடமி விருது மற்றும் பாரதிய பாஷா பரிஷாத், என்.கே.கேல்கர் மற்றும் ஆச்சார்யா அட்ரே போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.
அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட சில திரைப்படங்களில் கதாசிரியராகவும் அருண் சாது தனது திறமையை வெளிக்காட்டியவர்.
இந்நிலையில், இதயநோய் காரணமாக நேற்று காலை 10.30 மணியளவில் மும்பையில் உள்ள சாய் சியோன் தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.