மகாராஷ்டிர மாநிலம், உஸ்மானாபாத் மாவட்டத்தில் பிறந்த குழந்தைக்கு 6 நிமிடத்தில் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த மாவட்ட ஆட்சியர் ராதாகிருஷ்ண காமே கூறியதாவது:
உஸ்மானாபாத் மாவட்ட மகளிர் சிறப்பு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.03 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. பாவனா சந்தோஷ் ஜாதவ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அந்தக் குழந்தைக்கு ஆதார் எண் கோரி பெற்றோர் பதிவு செய்தனர். அந்த மருத்துவமனையில் இருந்த ஆதார் அதிகாரிகள் 12.09 மணிக்கு ஆதார் அட்டையை ஆன்லைன் மூலம் வழங்கினர். பிறந்த சான்றிதழும் பாவனாவுக்கு அளிக்கப்பட்டது. குழந்தை பிறந்த சில நிமிடங்களுக்குள் ஆதார் வழங்கப்படுவது அரிதான நிகழ்வாகக் கருதுகிறேன்.
உஸ்மானாபாதில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் விரைவில் ஆதார் எண் வழங்கப்படும். அத்துடன், குழந்தைகளின் ஆதார் எண் அவர்களது பெற்றோரின் ஆதார் எண்களுடன் இணைக்கப்படும் என்றார் ராதாகிருஷ்ண காமே.
அந்த மருத்துவமனையில் கடந்த ஆண்டில் பிறந்த சுமார் 1,300 குழந்தைகளுக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது என்று அந்த மருத்துவமனை மருத்துவர் ஏக்நாத் மாலே தெரிவித்தார்.