மைசூரில் 10 நாள்கள் நடைபெற்ற தசரா திருவிழா நிறைவு

மைசூரில் கடந்த 10 நாள்களாக நடைபெற்று வந்த உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா சனிக்கிழமை நிறைவடைந்தது. நிறைவு நாளன்று வண்ணமயமான யானை ஊர்வலம், தீப்பந்த ஊர்வலம் ஆகியன நடைபெற்றன.
தசரா விழாவின் நிறைவுநாளையொட்டி கர்நாடக மாநிலம் மைசூரில் சனிக்கிழமை மக்கள் வெள்ளத்துக்கு இடையே சாமுண்டேஸ்வரின் அம்மன் சிலையை தங்க அம்பாரியில் சுமந்து வரும் யானை.
தசரா விழாவின் நிறைவுநாளையொட்டி கர்நாடக மாநிலம் மைசூரில் சனிக்கிழமை மக்கள் வெள்ளத்துக்கு இடையே சாமுண்டேஸ்வரின் அம்மன் சிலையை தங்க அம்பாரியில் சுமந்து வரும் யானை.

மைசூரில் கடந்த 10 நாள்களாக நடைபெற்று வந்த உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா சனிக்கிழமை நிறைவடைந்தது. நிறைவு நாளன்று வண்ணமயமான யானை ஊர்வலம், தீப்பந்த ஊர்வலம் ஆகியன நடைபெற்றன. இதைக் காண லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.
1610}ஆம் ஆண்டில் அன்றைய மைசூரு மன்னர் ராஜா உடையாரால் தொடக்கிவைக்கப்பட்ட தசரா பெருவிழா, 407}ஆவது ஆண்டாக மைசூரில் செப். 21}ஆம் தேதி தொடங்கி கடந்த 10 நாள்களாக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வந்தது. 
1971}ஆம் ஆண்டு முதல் கர்நாடக மாநில அரசின் விழாவாக நடத்தப்பட்டு வரும் தசரா திருவிழாவில் பல்வேறு கலை, கலாசார, பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் நிறைவுப் பகுதியாக மைசூரில் சனிக்கிழமை யானை ஊர்வலம், தீப்பந்த ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மிகுந்த உற்சாகத்துடன் நடத்தப்பட்டன. 
கொடிமர பூஜை: அம்பாவிலாஸ் அரண்மனையின் வடக்கு வாயிலில் சனிக்கிழமை நண்பகல் 2.15 மணிக்கு மகர லக்னத்தில் நந்தி கொடிமர பூஜை செய்த முதல்வர் சித்தராமையா, கர்நாடக மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்து வழிபட்டார். 
விழாவில் உடையார் மன்னர் குடும்ப பட்டத்து இளவரசர் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
யானை ஊர்வலம்: அதன்பின்னர், அரண்மனை வளாகத்தின் முன்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட மேடையில் இருந்து, சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருந்த 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமந்து நின்றிருந்த அர்ஜூனா தலைமையிலான யானை ஊர்வலத்தை பிற்பகல் 4.45 மணிஅளவில் முதல்வர் சித்தராமையா மலர் தூவி பூஜை செய்து தொடக்கி வைத்தார். அர்ஜூனா தவிர, காவிரி, சைத்ரா, பலராமா, அபிமன்யூ, பிரசாந்த், ஹர்ஷா, கோபி, கோபாலசுவாமி, துர்கா பரமேஸ்வரி உள்ளிட்ட யானைகள் முன்னால் நடந்து செல்ல, அவற்றை பின்தொடர்ந்து யானைப் படை, 110 கலைக் குழுக்கள், 40 அலங்கார வாகனங்கள் அணிவகுத்து சென்றன. இதைத் தொடர்ந்து, யானை ஊர்வலம் தொடங்கப்பட்டதை குறிக்கும் வகையில் பீரங்கிகள் 21 குண்டுகள் முழங்கின.
முதல்வர் மனைவி அளித்த சேலை: யானையின் மீது வைக்கப்பட்டிருக்கும் தங்க அம்பாரியில் அமர்ந்து வீதி உலா செல்லும் சாமுண்டீஸ்வரிஅம்மனுக்கு கடந்த 15 ஆண்டுகளாக பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் கொடுக்கும் பட்டுச் சேலையை சார்த்துவது வழக்கம். ஆனால், இம்முறை முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி வேண்டுகோளின்படி, அவர் அளித்த பட்டுச் சேலையை சார்த்தி அம்மன் வீதி உலா புறப்பட்டார். முன்னதாக, சாமுண்டீஸ்வரி கோயிலில் இருந்து அரண்மனைக்கு கொண்டுவரப்பட்ட அம்மன் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதன்பின்னர், உற்சவ மூர்த்தியான அம்மன் சிலை தங்க அம்பாரியில் அமர்த்தப்பட்டது.
கலைமயம்: கர்நாடகத்தின் கலை, இலக்கியம், கட்டடக்கலை, பாரம்பரியம், வரலாறு, கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான அலங்கார ஊர்திகள் மக்களை வெகுவாகக் கவர்ந்தன. 3 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்ற வண்ணமயமான இசைக் குழுக்கள், நடனக் குழுக்களின் இசையும், நடனமும் சாலையின் இருபுறங்களில் ஆவலோடு காத்திருந்த மக்களை குதூகலிக்க வைத்தன. 40}க்கும் மேற்பட்ட அலங்கார வாகனங்கள் அணிவகுத்து வரிசையாக சென்றன. இந்த ஊர்வலத்தில் கர்நாடக மாநில ஆயுதப்படை, தீயணைப்புப் படை, மரம் ஏறும் படை, கர்நாடக காவல் இசைப்படை உள்ளிட்ட 30}க்கும் மேற்பட்ட படையினர் வீரநடைபோட்டு அணிவகுத்து வந்தனர்.
மக்கள் கூட்டம்: தசரா விழாவின் அங்கமாக நடைபெற்ற யானைகள் ஊர்வலத்தை காண இந்தியா தவிர, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் மைசூரில் திரண்டிருந்தனர். அரண்மனை வளாகத்தில் மட்டும் யானை ஊர்வலத்தை காண வருகை தரும் மக்கள் அமர 25 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. இதுதவிர, சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளிலும் அமர்ந்து யானைகள் ஊர்வலத்தை மக்கள் கண்டு ரசித்தனர். மைசூரில் திடீரென பெய்த மழையையும் பொருள்படுத்தாமல் யானை ஊர்வலத்தை காண மக்கள் வெள்ளமென சாலையோரங்களில் திரண்டு நின்றிருந்தனர்.
ஊர்வலப் பாதை: அரண்மனையின் பலராமா வாயிலில் இருந்து கம்பீரமாக நடைபோட்ட யானை ஊர்வலம், ஜெயசாமராஜேந்திர உடையார் சதுக்கம், கே.ஆர்.சதுக்கம், சய்யாஜிராவ் சதுக்கம், ஆயுர்வேத சதுக்கம், பம்புபஜார், ஹைவே சதுக்கம் வழியாக பண்ணி மண்டபம் நோக்கி சென்றன.
தீப்பந்த ஊர்வலம்: பண்ணி மண்டபத்தில் தசரா விழாவின் நிறைவை குறிக்கும் வகையில் நடைபெறும் தீப்பந்த ஊர்வலத்தை இரவு 8 மணிக்கு ஆளுநர் வஜுபாய்வாலா தொடக்கி வைத்தார். இதை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர். இந்த விழாவில் முதல்வர் சித்தராமையா, அமைச்சர்கள் மகாதேவபிரசாத், தன்வீர்சேட், பிரியாங்க்கார்கே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com