ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டி அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக மத்திய அரசுக்கும், ஆந்திர மாநில அரசுக்கும் இடையிலான பிரச்னை நீடித்து வருகிறது. மத்திய தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சியும் மார்ச் 16-ஆம் தேதி விலகியது.
இவ்விவகாரம் தொடர்பாக ஆந்திராவில் எதிர்கட்சியாக உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகிறது. மேலும் ஆந்திர எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி நடைபெற்ற போராட்டங்களின் காரணமாக அவை நடவடிக்கைகள் பாதிப்படைந்தன. குறிப்பாக மாநிலங்களவை தினசரி 1 மணிநேரம் வரை மட்டுமே நடைபெற்றது. இதனால் பெரும்பாலான நலத்திட்டங்கள் தொடர்பான விவாதங்கள் நடைபெறவில்லை.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரம் தொடர்பாக அம்மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, வருகிற ஏப்ரல் 20-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளார்.