ஹைதராபாத்: 2007-ஆம் ஆண்டு ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் மசூதியில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சாமியார் அசீமானந்த் உள்ளிட்ட ஐவரையும் விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஹைதராபாத்தின் புகழ்பெற்ற சார்மினாருக்கு அருகிலுள்ளது மக்கா மஸ்ஜித் மசூதி. இந்த மசூதியில் கடந்த 18.07.07 - வெள்ளிக்கிழமையன்று தொழுகை நடந்து கொண்டிருக்கும் பொழுது பலத்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. மசூதியை தரை மட்டமாக்கிய இந்த குண்டுவெடிப்பில் 9 பேர் மரணமடைந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
குண்டு வெடிப்புக்குப் பின்னர் மசூதிக்கு வெளியே நிகழ்ந்த போராட்டங்களைக் கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியாகினர். பின்னர் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கை தேசிய விசாரணை ஆணையம் விசாரித்து வந்தது.
அவர்களது விசாரணையில் குண்டு வெடிப்பினைத் திட்டமிட்டதாக வலதுசாரி சித்தாந்த ஆதரவாளர்களான சாமியார் அசீமானந்த், தேவேந்திர குப்தா, லோகேஷ் சர்மா, பரத்பாய் மற்றும் ரஜேந்தர் சவுத்ரி ஆகிய ஐவரை விசாரணை ஆணையம் கைது செய்தது. பின்னர் அவர்கள் மீது நல்லம்பள்ளி நீதிமன்ற வளாகத்தில் உள்ள தேசிய விசாரணை ஆணைய சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த வழக்கின் மீதான தீர்ப்பு திங்களன்று காலை வழங்கப்பட்டது. இதில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாமியார் அசீமானந்த் உள்ளிட்ட ஐவரையும் விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறி விட்டதாக அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.