புதுதில்லி: பாலியல் வல்லுறவு செய்து கொடூரமாகக் கொல்லப்பட்ட காஷ்மீர் சிறுமியின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் கத்வா மாவட்டத்தில் நாடோடி இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரமானது நாடு முழுவதும் கடுமையான அதிர்ச்சி அலைகளைக் கிளப்பியுள்ளது
இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் என இந்து அமைப்புகளின் ஆதரவாளர்கள் மற்றும் காவல்துறையினர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளுக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற ஊர்வலம் ஒன்றில் மாநில பாஜக அமைச்சர்கள் இருவர் பங்கேற்றது இன்னும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பாலியல் வல்லுறவு செய்து கொடூரமாகக் கொல்லப்பட்ட காஷ்மீர் சிறுமியின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றால் நியாயமாக இருக்காது என்று கூறி, வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி சிறுமியின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவானது திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது காஷ்மீர் சிறுமியின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், அத்துடன் சிறுமியின் வழக்கறிஞருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்த நீதிமன்றம் வழக்கினை ஏப்ரல் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.