உத்தரப் பிரதேசத்தில் உன்னாவ் தொகுதி பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ், இரவு கேளிக்கை விடுதி திறப்பு விழாவில் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஹிந்து பெண்கள் குறைந்தது 4 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்; மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் எனக் கூறி அவ்வப்போது சரிச்சைகளில் சிக்கியவர் சாக்ஷி மகராஜ். இந்த நிலையில், தலைநகர் லக்னெளவில் இரவு கேளிக்கை விடுதி ஒன்றின் திறப்பு விழாவில் அவர் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நிகழ்ச்சியில், தனக்கு பரிசளிக்கப்பட்ட விநாயகர் சிலையை சாக்ஷி மகராஜ் பெற்றுக் கொள்ளும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. மேலும், அந்த நிகழ்ச்சி உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகியுள்ளது.
உன்னாவ் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டதாக பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங்கை சிபிஐ கைது செய்துள்ள நிலையில், இரவு கேளிக்கை விடுதி திறப்பு விழாவில் சாக்ஷி மகராஜ் கலந்து கொண்டுள்ளார்.
ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு சாக்ஷி மகராஜ் அழைத்துச் செல்லப்பட்டதன் பின்னணியில் சதி இருப்பதாக, அவரது உதவியாளர் அசோக் கத்தியார் கூறினார். இது தொடர்பாக, அவர் மேலும் கூறியதாவது:
அன்றைய தினம், சாக்ஷி மகராஜ் தில்லிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர், தனது உறவினர் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அழைத்துச் சென்றார். அங்கு சென்ற பிறகு கூட கேளிக்கை விடுதி திறப்பு விழா பற்றி சாக்ஷி மகராஜுக்கு சொல்லப்படவில்லை. இவை அனைத்தும் கணநேரத்தில் நடந்துவிட்டது.
எம்.பி.யின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில், சதித் திட்டத்துடன் இந்தச்சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு லக்னெள காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
ஆனால், திறக்கப்பட்டிருப்பது கேளிக்கை விடுதி அல்ல; சைவ உணவகம்தான் என்று அந்த உணவகத்தின் உரிமையாளர் சுமித் சிங் கூறினார். தங்களது உணவகத்தில் மது விற்பனை செய்யப்படவில்லை; அழைப்பிதழில் கிளப் என்று தவறாக அச்சிட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.
இதுகுறித்து சமாஜவாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் கன்ஷியாம் திவாரி கூறுகையில், ''பாஜகவும், அக்கட்சியின் தலைவர்களும் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே இருக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகிறது'' என்றார்.