சீக்கிய மத குருக்களில் முதலாமவரான குரு நானக் தேவ் குறித்த ''நானக் ஷா ஃபக்கீர்'' திரைப்படத்தை வெளியிட அனுமதி அளிக்கும் இடைக்கால உத்தரவு தொடரும் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
குரு நானக்கின் வாழ்க்கை வரலாறு சரியான முறையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளதா, இல்லையா என்ற விஷயம் ஆராயப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
''நானக் ஷா ஃபக்கீர்'' திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கப்படுவதாக சீக்கிய மதத்தின் தலைமை பீடமான ''சிரோண்மணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி'' அறிவித்திருந்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இதன் அடுத்தக்கட்ட விசாரணையை மே மாதம் 8-ஆம் தேதி நடத்துவதாக அவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, தயாரிப்பாளர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் ஆர்.எஸ்.சூரி வாதிடுகையில், பஞ்சாப் தவிர்த்து நாடு முழுவதிலும் படம் திரையிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அதேவேளையில், எதிர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் பி.எஸ்.பட்வாலியா ஆஜராகி வாதாடினார். சீக்கிய மதத்தினுடைய 10 குருக்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர்களது குடும்பத்தார்கள் குறித்து யாரும் படம் எடுக்கக் கூடாது என்று குருத்வாரா பிரபந்தக் கமிட்டி கடந்த 2003-ஆம் ஆண்டு சுற்றறிக்கை வெளியிட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.