கால்நடை தீவன ஊழல் வழக்கில் 37 பேருக்கு 3.5 ஆண்டுகளிலிருந்து 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன், ஒட்டுமொத்தமாக ரூ.29 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
கால்நடை பராமரிப்புத் துறை முன்னாள் இயக்குநர் ஓ.பி.திவாகருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
இருவேறு வழக்குகளில் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையை அவருக்கு ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி நீதிமன்றம் வழங்கி உத்தரவிட்டது என்று சிபிஐ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
முன்னாள் அதிகாரிகள் 15 பேருக்கு தலா 7 ஆண்டுகள் (இரண்டு வழக்குகளில் தலா 3.5 ஆண்டுகள்) கடுங்காவலும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
மாட்டுத் தீவனத்தை அளித்தவர்களில் 3 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் 18 பேருக்கு தலா 3.5 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது என்று அந்தச் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
மானிய விலையில் விவசாயிகளுக்கு மாட்டுத் தீவனம் அளித்ததாக போலியாக ரசீதுகளை அளித்து முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஜார்க்கண்ட் அதிகாரிகளுக்கு எதிராகப் புகார் எழுந்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது.