புது தில்லி: ஹைதராபாத் மெக்கா மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தொடர்பான வழக்கில், அனைவரையும் விடுதலை செய்த என்ஐஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவீந்திர் ரெட்டியின் ராஜினாமா நிராகரிக்கப்பட்டது.
ஹைதராபாத் மெக்கா மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சுவாமி அஸிமானந்த் உள்ளிட்ட 5 பேரையும் விடுதலை செய்து என்ஐஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவீந்திர்ரெட்டி கடந்த திங்கள்கிழமை தீர்ப்பளித்தார்.
தீர்ப்பை பிறப்பித்த அன்றைய தினமே, நீதிபதி ரவீந்திர்ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
ஹைதராபாதில் உள்ள கூடுதல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியிடம் தனது பதவி விலகல் தொடர்பான கடிதத்தையும் அன்றைய தினமே அளித்தார்.
தனது ராஜிநாமா கடிதத்தில், ''தனிப்பட்ட காரணத்துக்காக பதவியை ராஜிநாமா செய்கிறேன்; மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்குக்கும் எனது ராஜிநாமாவுக்கும் தொடர்பில்லை'' என்றும் ரவீந்தர் ரெட்டி குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், நீதிபதி ரவீந்தர் ரெட்டியின் ராஜினாமா நிராகரிக்கப்பட்டதாகவும், தனது விடுமுறையை முடித்துக் கொண்டு உடனடியாக பணியில் சேருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.