புதுதில்லி: நாடாளுமன்றத்தை இழுத்து மூடியவர் மோடி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் விமர்சனம் செய்துள்ளார்.
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாரதிய ஜனதா அரசு அரசியல் சாசன முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில், ஆர்.எஸ்.எஸ் சார்புடையவர்களை நியமிக்கிறது. இதன் காரணமாக இத்தகைய அரசியல் சாசன அமைப்புகளை மோடி சிதைக்கிறார் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.
எனவே 'அரசியல் சாசனத்தினைக் காப்பாற்றுவோம்' என்ற பெயரில் நாடு தழுவிய பிரசார இயக்கத்தை காங்கிரஸ் கட்சி முன்னெடுத்து வருகிறது. அதன் துவக்க விழா தில்லியில் திங்களன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்பொழுது அவர், 'மோடி நாடாளுமன்றத்தை இழுத்து மூடியுள்ளார். அத்துடன் உச்ச நீதிமன்றத்தினை நசுக்குகிறார்' என்று தெரிவித்தார்.
முன்னதாக பாஜகவினர் சரியாக பதிலளிக்காததால் முடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக சக நீதிபதிகளின் வெளிப்படையான பத்திரிகையாளர் சந்திப்பு ஆகியவற்றை ராகுல் குறிப்பிட்டு இவ்வாறு பேசியுள்ளார்.