ஜம்மு-காஷ்மீரில் மெஹபூபா முஃப்தி தலைமையிலான பிடிபி கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. இங்கு இந்த கட்சியின் முக்கிய பிரமுகர் குலாம் நபி படேல் பயங்கரவாதிகளால் புதன்கிழமை சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
அங்குள்ள புலவாமா மாவடத்தில் அமைந்துள்ள ராஜ்பூரா எனுமிடத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. அவர் யாதீர் என்ற பகுதியில் இருந்து புலவாமா வரும்போது பயங்கரவாதிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவருடன் பயணம் செய்த இரு பாதுகாவலர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அம்மாநில முதல்வரும், பிடிபி கட்சித் தலைவருமான மெஹபூபா முஃப்தி வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற கோழைத்தனமான செயல்களால் ஒரு குடும்பத்தின் நிலை பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், குலாம் நபி படேலை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பிவிட்டனர். இதுகுறித்து அம்மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.