சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொருளியல் பாடத்துக்கு புதன்கிழமை நடைபெற்ற மறுதேர்வில் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு எழுதினர்.
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொருளியல் பாடம், 10ஆம் வகுப்பு கணித பாடம் ஆகியவற்றுக்கு நடத்தப்பட்ட தேர்வின்போது வினாத்தாள்கள் கசிந்ததாக செய்திகள் வெளியாகின. இதுதொடர்பாக துறை ரீதியிலான விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
மேலும், சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொருளியல் பாடத்துக்கு ஏப்ரல் 25ஆம் தேதி மறுதேர்வையும் மத்திய அரசு அறிவித்தது. அதேநேரத்தில், சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு கணித பாடத்துக்கு மறுதேர்வு நடத்தும் திட்டமில்லை எனவும் மத்திய அரசு கூறியது.
அதன்படி, நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொருளியல் பாடத்துக்கு 4 ஆயிரம் மையங்களில் புதன்கிழமை மறுதேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில், நாடு முழுவதும் இருந்து 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு எழுதினர்.
உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனு: இதனிடையே, சிபிஎஸ்இ தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை கோரி, உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.