புது தில்லி: இட ஒதுக்கீடு என்பது வேலையை உறுதி செய்யாது என்று மத்திய போக்குவரத்துது துறை அமைச்சர் நிதின் கட்காரி பேசியுள்ளது சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிராவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 16 சதவீத இடஒதுக்கீடு கேட்டு, மராத்தா சமுதாயத்தினர் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக நடத்தி வரும் தீவிர போராட்டம் வன்முறை களமாக மாறியது. இதற்கிடையே ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் போராட்டம் மீண்டும் தொடங்கப்படும் என அந்த சமூகத்தினர் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இதனைக் குறிப்பிடும் விதமாக இட ஒதுக்கீடு என்பது வேலையை உறுதி செய்யாது என்று மத்திய போக்குவரத்துது துறை அமைச்சர் நிதின் கட்காரி பேசியுள்ளது சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இட ஒதுக்கீடு வழங்கப்பட்டாலும், இங்கு வேலை கிடையாது. தகவல் தொழில்நுட்பம் உதவியால் வங்கிகளில் வேலை வாய்ய்ப்பு குறைந்து விட்டது. அரசு பணிகளுக்கான ஆட்சேர்ப்பும் குறைந்திருக்கிறது. எல்லோரும் நாங்கள் பிற்படுத்தப்பட்டோர் என்கிறார்கள். பீகார் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களில் பிராமணர்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் அரசியலிலும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஆனாலும் அவர்கள் தங்களை பிற்படுத்தப்பட்டோர் என்றே கூறுகிறார்கள்.
எந்த மதமாகவோ இருக்கலாம், ஜாதியாகவோ இருக்கலாம், அனைத்து சமூதாயத்திலும் உடுத்த உடையும், உண்ண உணவும் இல்லாத மக்கள் இருக்கதான் செய்கிறார்கள். எனவே பொதுமக்களின் பொருளாதார நிலையை கவனத்தில் கொண்டு வேண்டுமானால் இடஒதுக்கீடு வழங்கப்படலாம்.
மஹாராஷ்டிராவில் நிலவும் சூழ்நிலையை சரிசெய்ய முதல்-மந்திரி தேவேந்திர பட்நவீஸ் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், பொதுமக்களும் அமைதி காக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.