மாநிலங்களவைத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரிவன்ஷ் நாராயண் சிங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவைத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் மாநிலங்களவையில் இன்று நடைபெற்றது. இத்தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த ஹரிவன்ஷ் நாராயண் சிங்கும், காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் பி.கே.ஹரிபிரசாத்தும் போட்டியிட்டனர்.
அதில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஹரிவன்ஷ் நாராயணன் 125 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர் ஹரிபிரசாத்துக்கு 105 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ஹரிவன்ஷ் நாராயணன், பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தள எம்.பி. ஆவார். இதனிடையே மாநிலங்களவைத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரிவன்ஷ் நாராயண் சிங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசுகையில், மாநிலங்களவைத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரிவன்ஷ் நாராயண் சிங்குக்கு அனைத்து உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். ஹரிவன்ஷ் நாராயண் சிங் முன்னாள் பிரதமர் சந்திரசேகருக்கு மிகவும் பிடித்தவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.